ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யா கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். சித்திரை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் விழாவில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் களிமண் உருவச் சிலைகளை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்த நிலையில், இந்த ஆண்டும் இத்திருவிழாவானது நடைபெற்று வரும் நிலையில், 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (மே.05) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கோயில் வளாகத்தில் பாம்பு,தேள், பூரான், பல்லி மற்றும் சிலந்தி போன்ற விஷ ஜந்துக்களின் மண் உருவபொம்மைகள் விற்கப்பட்டன நிலையில், அதனை பக்தர்கள் வாங்கி தெய்வங்கள் முன் வைத்து வழிபாடு செய்தனர்.
பின்னர் கோயில் தெற்குப்புற சுவர் ஓரத்தில் கற்பூரமேற்றி பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் மண்சிலைகளை நடுகல்லில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பதும், மனிதர்களை விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பதும் ஐதீகமாகக் கருதப்படுகிறது.
இக்கோயிலுக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இத்திருவிழாவிற்காக புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் பகுதிகளிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க: குமரியில் கடல் அலையில் சிக்கிய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆறுதல்! - KANNIYAKUMARI COLLECTOR SRIDHAR