தஞ்சாவூர்: கடந்த ஜூலை மாதம் சட்டத்துக்குப் புறம்பாக மைனர் ஜோடியை தங்க அனுமதித்து, அதில் சிறுமி உயிரிழப்புக்குக் காரணமான தனியார் தங்கும் விடுதிக்கு கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலையில் கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம் பூட்டி சீல் வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மோதிலால் தெருவில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் உறவினர்களான பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவனும், 17 வயது கல்லூரி மாணவியும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவ நேரத்தில் கண்காணிப்பு கேமரா அணைத்து வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையிலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கியதால் இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியரால் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று விளக்கம் கோரப்பட்டது.
இதையும் படிங்க: துபாய் சென்ற 16 நாளில் இளைஞர் மர்ம மரணம்.. கதறி அழும் குடும்பத்தார்!
ஆனால், இதுநாள் வரை எந்த விளக்கமும் அளிக்காமல், பொது கட்டட உரிமம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து உரிமையாளர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்தனர். பின்னர், விசாரணைக்கு வந்த இவ்வழக்கு கடந்த 4ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தினால், தமிழ்நாடு பொது கட்டட சட்ட விதியின்படி, அந்த ஹோட்டல் இயங்க தடை விதித்து கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, இன்று (அக்.18) காலை கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில், கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலையில், அந்த ஹோட்டல் கட்டடம் மூடி சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-10-2024/22706604_seal.jpg)
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்