கரூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் அமைதியாக தேர்தல் முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைத்து மூன்று அடுக்கு துணை ராணுவப்படை மற்றும் போலீஸ் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள், 24 மணி நேரமும் பார்வையிடுவதற்கு வசதியாக சிசிடிவி கண்காணிப்பு அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சில நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் திடீர் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்டதாக அந்தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில், கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்துள்ளமைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் கட்ட மட்டும் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது. பிரதமர் மோடி மாண்பை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இஸ்லாமிய சமூக மக்களை குறிவைத்து தேர்தலை நடத்துவது அபாயகரமாக உள்ளது. பத்தாண்டு கால சாதனையை சொல்லி வாக்கு கேட்க வேண்டும் ஆனால், பிரதமர் அதற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.