சென்னை: மனித மூளையின் முப்பரிமாண படங்களை உயர் தெளிவுத்திறனுடன் கண்டறிந்து சென்னை ஐஐடி வெளியிட்டு இருக்கிறது. சுதா கோபாலகிருஷணன் மூளை ஆராய்ச்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான பணிகள் தொடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பல்வேறு மருத்துவ நிறுவனங்களிடமிருந்து கருவில் உருவான குழந்தையின் மூளை முதல் வெவ்வேறு வயதுடையவரின் 200க்கும் மேற்பட்ட மூளைகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டது.
மூளை குறித்தானா பல்வேறு ஆராய்ச்சி பணிகள் நடந்திருந்தாலும், மனித மூளையின் முப்பரிமாண படங்கள்(3D) மற்றும் அதன் மூலமாக மூளைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்டறிந்து முன்கூட்டி அதற்கான தீர்வு நடவடிக்கையை எடுக்கும் வகையில் இந்த ஆராய்ச்சி பணி துவங்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி கட்டுரையை அமெரிக்க இதழான 'ஜர்னல் ஆப் கம்பாரிட்டி நியூராலஜி'(Journal of Comparative Neurology) தலைவரான சுசானா ஹெர்குலானோ என்பவருக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆராய்ச்சியை கட்டுரையை பார்த்த அந்த இதழின் ஆசிரியர், இது இந்தியாவிற்கான பெருமை என இதனை பாராட்டி இருக்கிறார்.
'தாரணி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த தரவு தொகுப்பு உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு இலவசமாக கிடைக்கும் வகையில் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி திட்டப் பணிக்காக 15 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூபாய் 115 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.
இது பல்வேறு வெளி நிறுவனங்கள் மற்றும் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள்,மற்றும் மத்திய கல்வித் துறையிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் பேசிய போது, "மனித மூளையே புரிந்து கொண்டவர் யாருமே இல்லை.
கர்ப்பத்தில் குழந்தை உருவாகும் சமயத்தில் மூளையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு மூளையில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அல்சைமர் உள்ளிட்ட பாதிப்புகள் மூளையில் எங்கு பாதிக்கிறது என்பதை இன்று வரை புரிந்துகொள்ளவும் முடியாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: "15 வயதில் திருடிய பணத்தை 55 வயதில் திருப்பி கொடுத்த முதியவர்" - கோவையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
அந்த வகையில், மூளையின் வடிவம் எப்படி இருக்கிறது என்பதனை ஐஐடி ஆராய்ச்சி செய்தது. 14 முதல் 28 வாரத்தில் (2 nd trimester) உள்ள கருவின் மூளையை ஆராய்ச்சி செய்தோம். இது போன்ற ஆராய்ச்சியை உலகில் முதல் முறை செய்து வரலாறு படைத்துள்ளோம். இந்த தொழில்நுட்பத்திற்கு 'தாரணி' என பெயர் சூட்டியுள்ளோம்.
கரோனா சமயத்தில் இதற்கான வேலைப்பாடுகளைத் தொடங்கினோம். இந்த ஆராய்ச்சிக்காக நாங்கள் பயன்படுத்திய பெரும்பாலான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. ஐஐடி மற்றும் சவீதா நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்துள்ளோம். 15 மில்லியன் டாலர் செலவு செய்து இந்த தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது.
Principal of scientific education, Prime minister office இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு நிதி வழங்கி உள்ளனர். மேலும் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான கோபாலகிருஷணன் இந்த ஆராய்சிக்கு ரூ.60 கோடி ரூபாய் நிதி வழங்கினார். மூளை குறித்து படித்து அதன் தன்மையை தெரிந்து கொள்வதன் மூலம் ஆரம்ப காலத்திலேயே மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை வழங்க முடியும்.
சர்வதேச தரம் வாய்ந்த ஆராய்ச்சியை இந்தியாவிலும் செய்ய முடியும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி முன்னுதாரணம். இது போன்ற கண்டுபிடிப்புகளை பார்த்து உத்வேகம் அடைந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இதுபோன்ற தொழில்நுட்பத்தின் மீது முதலீடு செய்து தொழில் முனைவோராக வேண்டும்" என தெரிவித்தார்.