சென்னை: கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில், தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு பூங்காவை" அக்டோபர் 7-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தனித்தனி கட்டணங்கள்: இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு நபர் உள்ளே சென்று அனைத்து சிறப்பு அம்சங்களையும் பார்வையிட வேண்டும் என்றால் உணவு கட்டணத்தைத் தவிர ரூ.650 செலுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தும் 3 மணி நேரத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்காவின் சிறப்பம்சங்கள்: இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் பயணம், கலைஞர்களின் கலைக்கூடம், 16 மீட்டர் உயரம் மற்றும் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் கண்ணாடி மாளிகை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2600 சதுர அடியில் ஆர்க்கிட் குடில், அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் என பல சிறப்பு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், கலைஞர் நூற்றாண்டு பூங்காவைப் பார்வையிட்டவர்கள் ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், பிரபு என்பவர் கூறுகையில், "இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா மிகவும் அருமையாக உள்ளது. கொடைக்கானல், ஊட்டியில் இருப்பது போன்று உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற ஒரு இடமாக இருக்கிறது. நுழைவு கட்டணம் இருந்தால் தான் இந்த பூங்காவை பராமரிக்க முடியும். முறையாக பராமரித்தால் நன்றாக இருக்கும். உள்ளே இருக்கும் நிகழ்வுகளுக்கு தனியாக கட்டணம் வசூல் செய்கின்றனர். இங்குள்ள பறவையகம் மற்றும் கண்ணாடி மாளிகை தனித்துவமாக உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய ஜான் பிரகாஷ் பேசுகையில், “சென்னை நகரத்தில் நடுவே இப்படி ஒரு பூங்கா அமைத்தது நன்றாக உள்ளது. ஒரு கிராமத்தில் உள்ளது போல இருக்கிறது. கட்டணங்கள் தான் அதிகமாக உள்ளது. அதை பாதியாக குறைத்தால் நன்றாக இருக்கும். குடும்பத்தோடு வருவதால் கட்டணம் அதிகமாக தெரிகிறது. குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக அனைத்தையும் கண்டுகளித்தனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் கலைஞர் பூங்கா திறப்பு.. சிறப்பம்சங்கள், டிக்கெட் விலை எவ்வளவு?
மற்றொரு பார்வையாளரான மகேஷ், "சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா மிகவும் வரவேற்கத்தக்கது. இது உலகத்தரத்தில் உள்ளது. இங்குள்ள பறவையகம் சிறப்பாக உள்ளது. மற்ற இடங்களில் பறவைகள் கூண்டுகளில் இருக்கும். ஆனால், இந்த பூங்காவில் கூண்டுக்கு உள்ளேயே சென்று உணவளிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். சாதாரணமாக இருக்கும் பறவை இனங்கள் இல்லாமல், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய ஆச்சர்யமூட்டும் பறவைகள் இங்குள்ளன. மின்சார பொருட்கள் வெளியே தெரிகின்றது. இது குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும், நீர்வீழ்ச்சியிலும் கூட எந்த ஒரு தடுப்பு சுவர்களும் போடவில்லை. நீர்வீழ்ச்சி மிகவும் ஆழமாக உள்ளது. எனவே, அதனை கருத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.