சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் தரம் இல்லாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்த நிறுவனமான 'அருணாச்சலா இன்பேக்ட்ஸ்' நிறுவனம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சட்ட விரோதப் பரிமாற்றம் நடந்ததற்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச்.09) காலை அருணாச்சலா இன்பேக்ட்ஸ் உரிமையாளர் செல்வராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், சென்னையில் மட்டும் ராஜா அண்ணாமலைபுரம்,தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை,எழும்பூர்,வேப்பேரி உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் செல்வராஜ் நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரு நாள் முழுவதும் அரசு ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் நிறைவு பெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீடு,அவருடைய அரைஸ் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய நிறுவனங்கள், அலுவலகம், போயஸ் கார்டன் வீடு, போர்ட்ஸ் கிளப் பகுதியில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதவ் அர்ஜுனாக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆவணங்களாகக் கைப்பற்றி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் சோதனை எதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சோதனைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜாஃபர் சாதிக் சிக்கியது எப்படி? போதைப்பொருள் கடத்தலில் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு.. என்சிபி அளித்த ஷாக் ரிப்போர்ட்!