ETV Bharat / state

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்; சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! - தைப்பூசத்திற்கு சிறப்பு பேருந்துகள்

Thaipusam festival in Palani: பழனியில் தைப்பூச திருவிழா முன்னிட்டு ஐந்தாம் திருவிழாவான இன்று (ஜனவரி.23) பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், பக்தி பாடல்கள் பாடியபடி கிரிவலப் பாதையில் குவிந்துள்ளனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 5:46 PM IST

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவர். தமிழகத்திலிருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில், தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை (ஜன.24) ஆறாம் திருவிழாவில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஏழாம் நாளான வரும் 25ஆம் தேதி அன்று மாலை, பூச நட்சத்திரத்தில் தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை ஆக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று (ஜனவரி.23) ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். மேலும், முருகன் பக்தி பாடலை பாடி கிரிவலப் பாதையில் குவிந்து வருகின்றனர்.

குடிநீர், கழிவறை, தங்குமிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு கருதி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும், ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கோயம்புத்தூரில் இருந்தும் சிறப்புப் பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன. தைப்பூசம் மற்றும் விடுமுறை தினங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகக் கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாட்களான 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோயம்புத்தூரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து மருதமலை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்குச் செல்லவும், மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிரிழந்த 4 பேருக்கு மானியத்தில் வீடு! ஊராட்சி தலைவர் பல கோடி மோசடி? 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.