கரூர்: காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கரூர் கோவை சாலையில் உள்ள ராமாகவுண்டன்புதூர் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஊராட்சியில் கரூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய நூலக கட்டிடப் பூமி பூஜை பணிகளைத் துவக்கி வைத்தார்.
இதன் பின்னர் ஈ.டிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்திற்கு எம்பி ஜோதிமணி அளித்த பிரத்தியேக பேட்டியில், “பொதுவாகக் கோயில் கும்பாபிஷேக விழாவை, அரசியல் கட்சி கூட்டம் போல யாரும் இந்தியா முழுவதும் நடத்திட முடியாது. கோயில் குடமுழுக்கு விழாவுக்கு என ஆகம விதிமுறைகள் உள்ளது.
கும்பாபிஷேகத்தைக் கட்சிக் கூட்டம் போல நடத்துகிறது பாஜக: கோயிலை முழுமையாகக் கட்டி முடித்த பிறகு கோயில் சிலையைப் பிரதிஷ்டை செய்து ஆகம விதிமுறைப்படி மக்கள் பார்வைக்குத் திறந்து வைப்பார்கள். இதனை நான்கு சங்கராச்சாரியார்கள் வலியுறுத்திக் கூறி வருகின்றனர். ஆனால் ராமரின் சிலை இன்று அயோத்தியில் குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு முன்னரே, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் போலப் பாரதிய ஜனதா கட்சி நடத்துகிறது. இவ்வாறு நடத்துவது, அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை அழைப்பை ஏற்கவில்லை. இந்தியாவின் பிரதமர் என்பவர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு பெண்களை அதிகாரப்படுத்துதல் விவசாயிகளின் வளர்ச்சி சிறு, குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சி குறித்துப் பேச வேண்டும்.
ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது பாஜக: தேர்தல் நேரத்தில், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்காக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என கூறினர். ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 15 லட்சம் கருப்புப் பணத்தை மீட்டு வழங்குவோம் என கூறினர். இளைஞர்களின் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என கூறினர். ஆனால் தற்போது, பாரதிய ஜனதா கட்சி அறம் சார்ந்த அரசியலுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். ஆகம விதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பெட்ரோல் விலை, கேஸ் சிலிண்டர் விலை ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளது. இதைப் பற்றி மக்கள் நிச்சயம் யோசிப்பார்கள். ராமர் கோயில் விழாவை வைத்து வலுக்கட்டாயமாக மக்களை தன் பக்கம் திசை திருப்பப் பார்ப்பது நிச்சயம் நடக்காது. மிக நிச்சயமாக எதிர்வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடையும் என்று தெரிவித்தார்.
மேலும், நேற்று கூட மதத்தை வைத்து மக்களைப் பிளவுபடுத்த பாஜக முயற்சித்து வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். மதம் என்பது தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கை. 17 ஆண்டுகள் இந்தியாவில், ஜவர்கலால் நேரு பிரதமராக இருந்துள்ளார். அனைத்து மத மக்களின் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையாக இந்தியப் பிரதமர் பதவியை அலங்கரித்தார். தமிழ்நாட்டில் கூட கலைஞர் கருணாநிதி ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார் இவர்கள் யாரும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் எதிராக இருந்தது கிடையாது.
அனைத்து மாநிலங்களிலும், மதம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் மக்களால் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தான், நாட்டை பாதுகாக்கவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் மட்டும் தான் அரசைத் தேர்வு செய்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அழுத்தம் தரும் பாஜக: அதை விட்டு ஒன்றிய அரசு மதம்.. மதம்.. என்று கூறி பிளவுபடுத்துவது மட்டுமின்றி, ஏமாற்றியும் வருகிறார்கள். இந்துக்கள் என்று பாஜக கூறுவதால், நூறு ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் இந்துக்களுக்கு மட்டும் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறதா, கேஸ் சிலிண்டர் ஆயிரம் ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கு வழங்கப்படுகிறதா? எந்த வித சலுகையும் அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை.
இந்தியாவில் சிறுபான்மையின ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து நிலைகளிலும் பாரதிய ஜனதா கட்சி அழுத்தம் தர வேண்டும் என செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்கப்படவில்லை. அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கும் அழைக்கப்படவில்லை.
குடியரசுத் தலைவரை பாஜக புறக்கணிக்கிறது: இந்தியாவின் முதல் குடிமகனாக உள்ள நாடாளுமன்றத்திற்குத் தலைவராக உள்ள குடியரசுத் தலைவர் ஒரு இந்துவாக இருந்தும், ஏன் பாரதிய ஜனதா கட்சி புறக்கணிக்கிறது. பாஜக இந்துக்களுக்குக்காண அரசு என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொய். பாஜக தங்கள் அரசியல் லாபத்திற்காக, ஒரு குறிப்பிட்ட மத மக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் இது நீண்ட காலம் நீடிக்காது.
நாட்டின் வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நரேந்திர மோடி அரசாங்கத்தை மக்கள் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவார்கள். அதற்கான முயற்சியாகத் தான் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் நடைப்பயணத்தை முதல் கட்டமாக நடத்தி முடித்துள்ளார்.
இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை பயணம் வடகிழக்கு மாநிலங்களில் ராகுல் காந்தி நடத்தி வருகிறார். இந்த நாட்டில் அரசியலும், மக்கள் நம்பிக்கைகளும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும், அதை நோக்கித் தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பயணித்து வருகிறது. தேசத்தின் வளர்ச்சி மட்டுமே நமக்கு முக்கியம் மக்களின் மத நம்பிக்கைகளை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அரசியல் கட்சிகள் அதைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை” என்று ஜோதிமணி கூறினார்.
இதையும் படிங்க: அரிச்சல்முனையில் பிரதமர் மோடி! கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம்!