தூத்துக்குடி: பாஜக மாவட்ட தலைவர் தேர்தலின் போது ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒரு தரப்பினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலைவர்கள் பதவி காலங்கள் முடிவடைந்ததை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் வைத்து மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவிற்கான தலைவர் தேர்தல் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று (ஜன.31) நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஏற்கனவே தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வரும் சித்ராங்கதன், நெல்லையம்மாள், சிவமுருக ஆதித்தன் மற்றும் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் போது, பாஜக கட்சியின் ஒன்றிய தலைவர், மாவட்ட பிரதிநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாக்களித்து தலைவரை தேர்ந்தெடுத்தனர்.
அப்போது, ஏற்கனவே தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வந்த சித்திராங்கதன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்ததால் அவரை கட்சியின் மாவட்ட தலைவராக மீண்டும் அவரை கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ரதி அறிவித்தார்.
இந்த நிலையில் பாஜக மற்றொரு பிரிவை சேர்ந்த கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் என்பவரின் 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், அவரை மாவட்டத் தலைவராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில், திடீரென பழைய மாவட்ட தலைவரையே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்ததால் அதிருப்தியடைந்தனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் தர்ஹா மனு: நிலுவையில் உள்ள வழக்கோடு சேர்க்க உத்தரவு!
பின்னர், கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் வெளியே வந்து கண்ணில் கருப்பு துணியைக் கட்டி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் திடீரென முற்றி, தள்ளுமுள்ளாக மாறியுள்ளது. அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் சுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார். அப்போது, அவருக்கு கிரீடம் வைக்கப்பட்டு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.