தருமபுரி: அதியமான்கோட்டை அருகே உள்ள முண்டாசு புறவடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலச்சந்தர்-பிரியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மற்றும் ஆறு வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டிலிருந்த குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்த முயற்சித்து, வீட்டின் வெளிப்புறம் உள்ள பாறை மீது இரு குழந்தைகளையும் மோதச்செய்து கொலைச்செய்து விட்டு மர்ம நபர் தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது..
இந்த தாக்குதலில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றொரு சிறுவன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் உண்மையில் கடத்தலா அல்லது முன்விரோத கொலையா என்ற கோணத்தில் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் கொலை வழக்கில் வெங்கடேஷ் என்பவரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கொலை செய்தது வெங்கடேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், போலீசாரின் தீவிர விசாரணையில், ஒரு தலை காதலால் இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், குழந்தையின் தாய் பிரியா மீது வெங்கடேஷிற்கு நீண்ட நாட்களாக ஒருதலைக் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பிரியாவின் திருமணத்திற்கு முன்பே வெங்கடேஷ் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், பிரியாவிற்கும் பாலச்சந்தருக்கும் திருமணம் நடந்த நிலையில் வெங்கடேஷ் தொடர்ந்து காதலித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காதலுக்கு இரு குழந்தைகள் இடையூறாக இருந்த காரணத்தால் வெங்கடேஷ் குழந்தைகளை வீட்டருகே உள்ள பாறையில் மோத வைத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால், இரு குழந்தைகளும் பலத்த காயத்துடன் துடித்துக் கதறியுள்ளனர். இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததைத் தெரிந்து கொண்டு வெங்கடேஷ் தலைமறைவாகியுள்ளார்.
குழந்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குழந்தைகளை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 3 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளார். மற்றொரு சிறுவனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மோப்பநாய்களிடம் இருந்து தப்பிக்கக் கொலை செய்த இடத்தில் மிளகாய்ப்பொடி தூவி தப்பிக்க வெங்கடேஷ் முயற்சி செய்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயிற்குச் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.