கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற பகுதியில் காங்கேயம் பாளையம், காடம்பாடி, செங்கத்துறை, சாமளாபுரம் கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாய பெருமக்களும் தொழில் செய்யக்கூடிய மக்களும் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியாக உள்ளது.
பிரதமர் 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமரும் பொழுது நாம் அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி. தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி இருக்கின்றனர். பீக்ஹவர் கட்டணம், நிலை கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டு உள்ளது.15 முதல் 55 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வு சோலார் கொண்டு வருவது மட்டுமே.
மத்திய அரசில் மீண்டும் பாஜக அமர்ந்தவுடன் பவர் டெக்ஸ் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டு வரப்படும். அதன் மூலம் விசைத்தறிகளுக்கு அனைத்தும் சோலார் கொண்டு வந்து பயன்படுத்தப்படும். கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 4 ஆயிரத்து 800 மாணவர்கள் படிக்கும் வகையில் 4 நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவோம். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.
அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் சோமனூர் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். மத்திய அரசு சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வரப்படும். அதன் மூலம் ஜவுளி ஏற்றுமதி வளாகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி பூங்காவை அமைப்பதை மத்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். நொய்யல் ஆறு பக்கத்திலேயே இருக்கிறது. இதை சீரமைக்க 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணத்தைச் சாப்பிடுவதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.
இந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைப் பார்த்துக் கொள்வதற்காகவே ஒரு நபர் தேவைப்படுகிறார். ஆனைமலை நல்லாறு திட்டத்தைக் கண்டிப்பாகச் செயல்படுத்துவோம். நீர் மேலாண்மைக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி பகுதியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, சோமனூரில் ஜவுளி பூங்கா மத்திய அரசு அமைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பவர் டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.
விசைத்தறி வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் சோலார் மின் தகடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நொய்யல் ஆற்றைச் சுத்தப்படுத்துவோம் என்றார். பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, ப.சிதம்பரமும் அவரது குடும்பத்தினரும் தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை இருக்கிறது என பதிலளித்தார்.
ப.சிதம்பரத்தின் தலைவராக உள்ள ராகுல் காந்தியும் வேலையில்லாமல் இருப்பதாக விமர்சித்த அண்ணாமலை, ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்றால், இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை இல்லை என அர்த்தம் இல்லை என காட்டமாகத் தெரிவித்தார். பிரதமர் தமிழகம் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பிரதமர் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்று மாலைக்குள் அது குறித்த விவரங்கள் தெரியவரும் என தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருமத்தம்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாஜகவினர் அதிக அளவில் வராததால் கட்டிட வேலைக்குச் செல்ல காத்திருந்தவர்களை பாஜகவினர் அழைத்து வந்து கையில் பாஜக கொடியைக் கொடுத்து நிற்க வைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளில் ரூ.4 இலட்சம் கோடி; கடன் பெறுவதில் தான் தமிழகம் முதலிடம் - நடிகை குஷ்பூ சாடல்! - Lok Sabha Election 2024