திருச்சி: நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக மத்திய ரயில்வே அமைச்சகம் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி திருச்சி ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளதாகத் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது "வரும் பிப்ரவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில்வே நிலையங்கள், 1500க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.அன்றைய தினம் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.
இதில் திருச்சி ரயில்வே கோட்டத்தைப் பொறுத்த வரையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 ரயில்வே நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 26ஆம் தேதி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 4 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்படவுள்ளது.இதற்காக ரூ.146.7கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருப்பாதிபுலியூர், மணக்கால், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை, சஞ்சீவி நகர், ஆலத்துார், வில்லியனுார் ஆகிய ஏழு இடங்களில் 224.94 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் அமையவுள்ளது. இந்தப் பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 91.11 கோடியில் பணிகள் முடிந்த 26 தரை மட்டப் பாலங்களைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.திருச்சி கோட்டத்தில், ரயில் தண்டவாளப் பகுதியில் கால்நடைகளை நடமாட விடுவதும், காரணம் இல்லாமல் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுப்பதும் அதிகம் நடக்கிறது. இதனால், ரயிலுக்குச் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாகத் திருச்சி – விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் வழித்தடத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, 321 வழக்குப் பதிவாகி உள்ளது. எனவே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இதைப் பொதுமக்கள், பயணிகள் விழிப்புணர்வாகச் செயல் பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய 'AI' - ஜெயலலிதாவின் குரலில் ஈபிஎஸ் வெளியிட்ட ஆடியோ!