பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பொங்கல் விழா மற்றும் தொடர்விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக திருக்கோயில் உண்டியல்கள் 21 நாட்களில் நிரம்பின. இதையடுத்து கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இரண்டு நாட்கள் எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூபாய் 6 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 559 கிடைத்துள்ளது.
உண்டியலில் பக்தர்கள் ஏராளமான தங்கம், வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. தங்கம் 1,874 கிராமும், வெள்ளி 27 ஆயிரத்து 003 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 906 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி மாலா மற்றும் அறங்காவலர் குழு பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர்.