மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா கடந்த ஜனவரி 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று (பிப்.10) சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருள கதிரறுப்பு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், தைப்பூச பௌர்ணமி தினமான இன்று (பிப்.11) தெப்பத்திருவிழா காலை 7 மணி அளவில் கோலாகலமாகத் தொடங்கியது.
அதிகாலை மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி, விளக்குத் தூண், கீழவாசல், காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து, மீனாட்சியம்மன் கோயிலின் உப கோயிலான மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
![தெப்பத் திருவிழாவில் இழுக்கப்பட்ட தேர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/23517970_theppathiruvizha.png)
பின்னர் அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க எழுந்தருளினர். இதனையடுத்து அனுப்பானடியைச் சேர்ந்த பாரம்பரியமாக வடம் பிடிக்கும் இளைஞர்கள், தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக முறைப்படி அழைத்து வரப்பட்டனர். அப்போது, கிராமத்தினருக்கு கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுத்த தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் மதுரை மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: தைப்பூச திருவிழா: விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில்!
கடந்த ஆண்டை விட, தெப்பக்குளத்தில் நீரின் அளவு குறைவாக இருந்தாலும், தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம் வந்த நிலையில் சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். நிகழ்வில், மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, மீனாட்சியம்மன் கோயில் துணை ஆணையர் கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் மீனா அன்புநிதி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, இன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த தெப்ப உற்சவத்தின் போது மட்டும் தான் சுவாமியும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினாலும் கூட சுவாமியை விட அம்மன் கூடுதலாக ஒரு வாகனமான அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருள்வார் என்பது கூடுதல் சிறப்பு.
தெப்பத்தை சுற்றியும் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாநகர காவல் ஆணையர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.