டெல்லி: கென்யாவில் அரசுக்கு எதிராக கலவரம் மூண்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதிய நிதி மசோதாவால் நாட்டில் பல்வேறு பொருட்கள் மற்றும் அரசு வழங்கி வந்த சேவைகளுக்கு வரி உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, அந்நாட்டில் வாழ்க்கை பொருளாதாரத்தை ஈடு செய்வதற்கு ஆகும் செலவுகள் அதிகமாக உள்ள நிலையில், அரசின் இந்த புதிய வரி உயர்வால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
ADVISORY FOR INDIAN NATIONALS IN KENYA
— India in Kenya (@IndiainKenya) June 25, 2024
In view of the prevailing tense situation, all Indians in Kenya are advised to exercise utmost caution, restrict non-essential movement and avoid the areas affected by the protests and violence till the situation clears up.
தலைநகர் நைரோபியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் முயன்றனர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது. நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதையடுத்து, கலவரத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் போலீசாருக்கு பொது மக்களுக்கு இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயம் அடைந்தனர். பொது மக்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் அப்பகுதியே மயானம் போல் காட்சி அளித்தது. இந்நிலையில், கென்யாவில் வாழும் இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய பணிகள் தவிர்த்து இந்தியர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம், தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கென்யாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், அத்தியாவசியமற்ற பணிகளுக்காக வெளியே வருவதை தவிர்க்கவும், நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிடும் செய்தி மற்றும் இணையதளங்கள், சமூக வலைதளங்களை பின்பற்றி அதன்படி பதற்றம் நிலவும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு! பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து! - Lok Sabha Speaker Om Brila