திருப்பதி: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்களின் மூன்று இடங்களில் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர்கள் டோக்கனை வாங்க முண்டியடித்துக் கொண்டதில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சீனிவாசம் கவுன்டரில் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
பைராகிப்பட்டேடா ராமாநாயுடு பள்ளியில் அமைந்துள்ள மற்றொரு டோக்கன் வழங்கும் மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த அனைவரும் திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.
தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சத்தியநாராயணபுரத்தில் அமைந்துள்ள டோக்கன் வழங்கும் மையத்திலும் மீண்டும் நெரிசல் ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, இம்மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது.
Pained by the stampede in Tirupati, Andhra Pradesh. My thoughts are with those who have lost their near and dear ones. I pray that the injured recover soon. The AP Government is providing all possible assistance to those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 8, 2025
வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்திருந்தது. அதற்காக புதன்கிழமை மாலை முதல் டோக்கன் வழங்கும் மையங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
The tragic stampede in Tirupati is deeply saddening.
— Rahul Gandhi (@RahulGandhi) January 8, 2025
My heartfelt condolences to the bereaved families. Wishing a swift recovery to all those injured.
I urge Congress leaders and workers to provide all possible assistance during this difficult time.
இந்த நிலையில், உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு ஆறுதலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைவேண்டும் எனவும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஆந்திர முதலமைச்சர் இன்று (ஜன.9) காலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
2 லட்சம் நிவாரணம்: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | pic.twitter.com/6zhj9ngOtR
— TN DIPR (@TNDIPRNEWS) January 9, 2025
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த திருமதி மல்லிகா (55) நேற்று (ஜன.8), ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயரமான செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த திருமதி.மல்லிகா அவர்களின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த திருமதி மல்லிகா அவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.