ஐதராபாத்: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மே.11) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவு பெறும் நிலையில், பாஜகவின் அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுப்பினார்.
75 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை பாஜகவில் வகுத்தவரே பிரதமர் மோடி தான் என்றும் பாஜகவில் அடுத்த பிரதமராக மோடியின் உத்தரவாதங்களை அமித் ஷா நிறைவேற்றுவாரா என்பதை அறிந்து மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும், மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க செல்லும்போது நாம் அமித் ஷாவுக்கு வாக்களிக்க போகிறோம், மோடிக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவில் தலைமை மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தொடர்ந்து 3வது முறையாக மோடி நாட்டியையும், கட்சியையும் வழிநடத்திச் செல்வார் என்றும் கூறினார்.
மேலும், பாஜகவில் 75 வயதுக்கு பின் ஓய்வு பெற வேண்டும் என்ற விதிகளே கிடையாது என்றும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாட்டின் நான்கு முனைகளும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்பதாகவும் அமித் ஷா கூறினார். மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உள்ளார் என்பதை அறிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்பி வருவதாக அமித் ஷா குறிப்பிட்டார்.
பாஜகவின் அரசியல் சாசனத்தில் 75 வயதுக்கு பின்னர் வெளியேற வேண்டும் என்ற எந்த விதிகளும் இல்லை என்பதையும், மோடி 2029 வரை பிரதமராக நாட்டை வழிநடத்துவார் என்பதையும், வரும் தேர்தலிலும் மோடி நாடு மற்றும் கட்சிக்கும் தலைமை தாங்குவார் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றார். இந்திய கூட்டணிக்கு நல்ல செய்தி எதுவும் இல்லாத காரணத்தால் இப்படி பொய்களை பரப்பி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் அமித் ஷா கூறினார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கருப்பு பண விவகாரம்: அதானி, அம்பானி மீது ஏன் நடவடிக்கை இல்லை? - மல்லிகார்ஜுன கார்கே! - Lok Sabha Election 2024