பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத கடும் வறட்சி நிலவுகிறது. பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், அத்தியாவசிய பணிகள் தவிர்த்து காவிரி நீரை வீண் விரயம் செய்ததாக 21 குடும்பங்களிடம் தலா 5 ஆயிரம் ரூபாயை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் வசூலித்து உள்ளது.
காவிரி நீரை தோட்டத்திற்கு பயன்படுத்துவது, கார் உள்ளிட்ட வாகனங்களை தூய்மைப்படுத்த பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தியதாக ஆன்லைன் மூலம் கிடைத்த புகாரில் ஏறத்தாழ 21 குடும்பங்களிடம் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டது. மேலும், பெங்களூருவில் உள்ள கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நீர் விளையாட்டுக்கள், ரெயின் டான்ஸ் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்குமாறு குடிநீர் வடிகால் வாரியம் அறிவுறுத்தி இருந்தது.
பெங்களூருவில் நாளொன்று பயன்பாட்டுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவில் கூட ஏறத்தாழ 500 மில்லியன் லிட்டர் நீர் பற்றாக்குறை நிலவுவதாக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். பெங்களூருவில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 600 மில்லியன் லிட்டர் நீர் பயன்பாட்டுக்கு தேவைப்படும் நிலையில், அதில் ஆயிரத்து 470 மில்லியன் லிட்டர் காவிரி நீர் மூலமும், 650 மில்லியன் லிட்டர் ஆழ்துளை கிணறுகள் மூலமும் நுகர்வு செய்யப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
மேலும் பெங்களூருவில் 14 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் உள்ள நிலையில், அதில் 6 ஆயிரத்து 900 கிணறுகள் வறண்டு போனதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஹோலி சிறப்பு பூஜையில் கோரம்.. உஜ்ஜைன் மகாகாள் கோயில் தீ விபத்தில் 14 பேர் படுகாயம்! ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - Ujjain Mahakal Temple Fire