தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற தொழுநோயாளிகளுக்கு சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். பின்னர் தொழுநோய் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து, தொழுநோயை ஒழிக்கப் பாடுபடுவோம் எனக் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "நீர்நிலைகளை நல்ல முறையில் பராமரித்து வந்ததுவரை நமக்கு எந்த பிரச்னையும் வரவில்லை எப்போது நமது வீட்டுக்கழிவு, தொழிற்சாலைக் கழிவு பொது இடங்களில் வரும் கழிவுகளை முறையாகச் சுத்திகரிக்காமல் நேரடியாக நீர்நிலைகளில் விட ஆரம்பித்தோமோ அன்றில் இருந்து பல்வேறு சவால்களுக்கு நாம் ஆளாகிவிட்டோம்.
தற்போது நாம் ஆர்.ஓ. தண்ணீரை பயன்படுத்துகிறோம். அதில் எந்தப் பலனும் இல்லை. இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை பூமியிலிருந்து நேரடியாக அருந்தும்போது அதில் பல்வேறு இயற்கை தாதுக்கள் இருக்கும். ஆனால் ஆர்.ஓ. முறையில் நாம் தாதுக்களை எல்லாம் வடிகட்டிவிட்டு வெறும் தண்ணீரைத்தான் குடிக்கிறோம்.
பரவக்கூடிய நோய்கள் நம் நாட்டில் அதிகரித்துவருகிறது குறிப்பாக 2016ஆம் ஆண்டுவரை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சீனாவில்கூட கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உயிரியல் ஆயுதம் தயார் செய்யும் ஆய்வகத்திலிருந்து வெளியேறிய வைரஸ் மூலமே இது ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை கூறியுள்ளது. ஆனால் சீனா அதை மறுத்துள்ளது. அதேபோல் அவர்களின் உணவுப் பழக்கங்கள் வித்தியாசமானது. கரப்பான் பூச்சி, பாம்பு போன்றவற்றை சாப்பிடுவார்கள். அது தவறில்லை. காலம்காலமாக அதைத்தான் சாப்பிட்டுவருகிறார்கள். ஆனால் அதை முறையாகச் சமைத்து சாப்பிட வேண்டும்" என்றார்.
இதையும் படியுங்க:'கால்நடைகளுக்கான மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துங்கள்'