கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில், பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள், அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருகபக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.
கட்டுமலை கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் கொடுத்தார் என்ற பெருமை கொண்டது. சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இத்தல முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்ட ஸ்தலம் இதுவாகும்.
தற்போது விழாவின் 6ம் நாளில் சஷ்டியை முன்னிட்டு அதிகாலை முதல், இரவு வரை பல்லாயிரக்கன பகதர்கள் நீண்ட வரிசையில் வந்து மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்தும், தீபங்கள் ஏற்றியும், சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவினை முன்னிட்டு, மூலவர் மண்டபத்தில் பூப்பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தது, நண்பகல் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமிக்கு விசேஷ அபிஷேகத்துடன் 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது.