தமிழ்நாடு

tamil nadu

குமரியில் கவரிங் நகை கொடுத்து ஏமாற்றும் பலே ஆசாமிகள் - போலீஸ் வலை

By

Published : Feb 12, 2020, 11:50 AM IST

குமரி: தங்க நகை வியாபாரிகள் மத்தியில் ஆசையைத் தூண்டிவிட்டு, கவரிங் நகையைத் தங்கநகை எனக் கூறி மோசடி செய்யும் வடமாநில கும்பலுக்கு காவல் துறையினர் வலைவிரித்துள்ளனர்.

Police searching Gold covering fraud gang
Police searching Gold covering fraud gang

குமரி மாவட்டத்தில் போலி நகைகளைத் தங்கநகைகள் எனக் கொடுத்து ஏமாற்றும் கும்பலின் கைவரிசை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. பெரும்பாலும் வடமாநில கும்பலைச் சேர்ந்தவர்களே இங்குள்ள தங்க நகை வியாபாரிகளைக் குறிவைத்து இதுபோன்று ஏமாற்றி பணம் பறித்துவருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தங்கக்கட்டி எனக்கூறி வெள்ளியில் தங்கமுலாம் பூசிக் கொடுத்து ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கநகை வியாபாரியிடம் கவரிங் நகையைக் கொடுத்து 5 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (49). அப்பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் ஒரு துண்டு தங்கநகையைக் கொடுத்து அதனை தங்கம் தானா என்று சோதித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார். அதனைச் சோதித்த பழனியப்பன் அது தங்கம் தான் என்று கூறியுள்ளார்.

அப்போது அந்த நபர் தன்னிடம் 12 லட்சம் மதிப்புமிக்க தங்கநகை உள்ளது எனக் கூறியுள்ளார். இதுபோல நிறைய நகை தன்னிடம் இருப்பதாகவும் பாதிவிலை கொடுத்தால் அதனைத் தந்துவிடுவதாகவும் அந்த இளைஞர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பழனியப்பன் நகைகளைக் கொண்டுவருமாறும் பார்த்துவிட்டுப் பின்னர் பணம் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பழனியப்பனின் போன் நம்பரை வாங்கிச்சென்ற அந்த இளைஞர், பின்னர் அவரை அழைத்து நகையுடன் வடசேரி பேருந்து நிலையத்தில் தான் நின்றுகொண்டிருப்பதாகவும் அங்கு வருமாறும் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை உள்ளதாகவும், ஆனால் அந்த நகைகளுக்கு 5 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டுப் பெற்றுக்கொள்ளாலாம் எனவும் கூறியுள்ளார்.

தங்கநகைக் கடை

இதையடுத்து வடசேரி பேருந்து நிலையம் சென்ற பழனியப்பன் அந்த நபரைச் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் அருகிலிருந்த பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து இருவரும் டீ அருந்திவிட்டு நகையைப் பார்த்தபோது, ஏற்கனவே அந்நபர் கொண்டுவந்த அதே துண்டு நகையைப் போல் தெரிந்துள்ளது. பின்னர் பழனியப்பன் 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு நகையை வாங்கிச் சென்றுள்ளார்.

இதையடுத்து கடைக்கு வந்த பழனியப்பன் நகையைச் சோதித்தபோது நகைகள் அனைத்தும் கவரிங் என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பழனியப்பனும் அந்நபரும் டீ அருந்திய ஹோட்டலிலுள்ள சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்துவருகின்றனர். மேலும் இந்த ஏமாற்றுச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வடமாநில நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் அவர்கள் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:கணவருக்கு 'கும்பி பாகமா' - என்னம்மா இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details