ஈரோட்டில் திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) கலந்துரையாடல் கூட்டம் நேற்று (மார்ச்.13) பெருந்துறை சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, "கவுன்சிலர்கள் அனைவரையும் சந்தித்து எதிர்கால திட்டங்கள் பணிகள் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டு அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
முதலமைச்சரின் ஆலோசனைப்படி பொதுமக்களை வார்டு வாரியாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கவுன்சிலர்களுக்கு உள்ளது. மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகள் குறித்த மனுக்களைப் பதவியேற்ற சில நாட்களுக்குள்ளேயே அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்துக்கு சோலார், சக்தி சாலையில் புறநகர் பேருந்து நிலையங்கள் மாடல் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
பெரியாரால் துவக்கப்பட்ட சிஎன்சி கல்லூரியை அரசுடைமை ஆக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் முழுவதும் அரசுடைமை ஆக்கப்படும். விரைவில் விளையாட்டு திடல் ஐஏஎஸ் அகாடமி நூலகம் உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டு சிஎன்சி கல்லூரி மாவட்டத்தின் அடையாளமாக மாற்றும் பணிகளைச் செய்து வருகிறோம்.