தமிழ்நாடு

tamil nadu

உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்ற ’டவ்-தே’

By

Published : May 17, 2021, 3:35 PM IST

டவ்-தே புயல் இன்று (மே.17) காலை 5.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tauktae
டவ்-தே

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (மே.16) மத்தியக் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (டவ்-தே), இன்று காலை 05.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

தற்போது டையூவிலிருந்து 160 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல் பகுதியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 17, 18ஆம் தேதிதளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 19ஆம் தேதி, நீலகிரி, சேலம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேர மழை அளவு (சென்டிமீட்டரில்)

பந்தலூர் (நீலகிரி) 13 செ.மீ., சோலையாறு (கோவை), வால்பாறை (கோவை) தலா 9 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை) 6 செ.மீ, அகரம் சீகூர் (பெரம்பலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு

தென் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) 18.05.2021 இரவு 11.30 வரை கடல் அலை 2.0 முதல் 2.3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details