தமிழ்நாடு

tamil nadu

கரோனா மனித இனத்திற்கு ஓரு நினைவூட்டல் - 'நீயே பிரபஞ்சம்' தன்ராஜ் மாணிக்கம்

By

Published : Jun 17, 2020, 9:34 PM IST

சென்னை: இயற்கை மனிதனை எச்சரித்து பாடுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கும் 'நீயே பிரபஞ்சம்' பாடல் குறித்து இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் மனம் திறந்துள்ளார்.

இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம்
இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம்

'வெண்ணிலா வீடு', 'சோன்பப்படி', 'டீக்கடை ராஜா', 'விசிறி', 'நிழல் உலகம்', 'ரகு', 'கீழக்காடு' ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் தன்ராஜ் மாணிக்கம். இவர், தற்போது நீயே பிரபஞ்சம் என்னும் பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் இயற்கையானது மனிதனைப் பார்த்து எச்சரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தன்ராஜ் மாணிக்கம் பேசுகையில், "வெகுநாட்களாகவே இயற்கையை மனிதர்களாகிய நாம் இழிவுபடுத்தியும் சேதப்படுத்தியும் இருக்கிறோம்.
அனைத்தையும் நமக்கு வழங்கும் இயற்கையை மனிதன் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பல வகையிலும் இயற்கைக்கு எதிராகவும் இருக்கிறோம். மனிதன் படைத்தவனை உதாசீனப்படுத்தி, இயற்கையையும் உயிரினங்களையும் கொடுமை செய்கிறான். கொலை செய்கிறான். மாசு படுத்துகிறான். இயற்கையுடன் சார்ந்து வாழ்வதை மறந்து, செயற்கை வழியில் சென்று மிருகமாக மாறிவிட்டான்.

அனைத்து உயிர்களுக்கும் இயற்கைக்கும் அநீதி செய்கிறான். அவனுக்குத் தெரியாது, இயற்கை ஒரு நாள் அவனை 'வச்சு செய்யும்' என்று. தற்போது உலகமே முடங்கிக் கிடக்கிறது. மனித உயிர் இனங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மிக மகிழ்ச்சியாய், சுதந்திரமாய் இன்புற்று வாழ்கின்றன. தற்போது வந்திருக்கும் கரோனா, மனித இனத்திற்கு ஒரு எச்சரிக்கை. தன்னிலை மறந்த மனிதனுக்கு, அதிரவைக்கும் ஒரு நினைவூட்டல். இனிவரும் காலங்களுக்கு இயற்கைக்குத் துணையாக மனித இனம் நிச்சயம் இருக்கும்.

நான் இசையமைத்திருக்கும் இந்த பாடல், இந்த அனைத்து கருத்துகளும் உள்ளடங்கியது. 'நீயே பிரபஞ்சம்' என்கிற தலைப்பில் இதற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் எஸ். ஞானகரவேல் எழுதி இருக்கிறார். 'வானமாய் நின்று கையசைத்தேன் பூமியால் உன்னை நான் அணைத்தேன், பச்சை இலைகளில் புன்னகைத்தேன் என்று தொடங்கி இயற்கையும் தெய்வமும் ஒன்றென நீ உணரும் நாள் என்றோ ?" என்று இப்பாடல் வரிகள் செல்கின்றன.

மேலும் அவர் கூறுகையில், இயற்கை கொடூரமாய் ஆடியதை பார்த்துள்ளோம். பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுவே, இயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும்? அதுதான் இந்தப் பாடல் "நீயே பிரபஞ்சம்" இந்தப் பாடலை நான் இசையமைத்து பாடி உள்ளேன். மேலும், டிரெண்ட் மியூசிக் இப்பாடலின் உரிமைகளைப் பெற்றுள்ளது. மனிதனுக்கு தற்போது மிக அவசியமான கருத்து பாடல் என்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details