கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. ஐந்து நாள்களை கடந்து போர் தொடர்ந்து வரும் நிலையில், ஆறாம் நாளான இன்று (மார்ச் 1) தலைநகர் கீவ்-இல் ரஷ்ய படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
கீவ் மட்டுமின்றி, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்விலும் ரஷ்யா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
64 கி.மீ நீளத்தில் ராணுவப் படை
இந்நிலையில்,கீவ்வின் வடக்கு பகுதியில் இருந்து 40 மைல் (64 கி.மீ) நீளத்திற்கு ரஷ்ய ராணுவ படைகள் நகருக்குள் வருவதை, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மாக்சர் டெக்னாலிஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கோள் புகைப்படங்கள் உறுதிசெய்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் பீரங்கிகள், டாங்கிகள் போன்ற போர் வாகனங்கள் அணிவகுத்து வருவதும், அவை நகரின் மையப்பகுதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருப்பதும் அதில் தெரியவந்துள்ளது. தெற்கு பெலாரஸில் ரஷ்யாவின் தரைப்படைகள் மற்றும் ஹெலிகாப்டர் படையின் நகர்வையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உடனடியாக வெளியேறுங்கள்
இந்நிலையில், கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி உக்ரைனின் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதுதொடர்பாக, உக்ரைனின் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் கீவ் நகரில் இருந்து இன்று உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்துகிறோம். கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது வேறு போக்குவரத்துகள் மூலம் வெளியேறவும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அத்தூதரகம் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டில், "இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிவ்வில் இருந்து மேற்கு நோக்கி நகர்வதை தூதரகம் உறுதி செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன், கிவ்வில் மீதமுள்ள சில மாணவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
70 ராணுவத்தினர் பலி
போர் அறிவித்தது முதல் இதுவரை, ஏறத்தாழ 400 மாணவர்கள் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தின் அறுகே தங்கவைக்கப்பட்டு, ரயில்கள் மூலம் கீவ் நகரில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர "ஆப்ரேஷன் கங்கா" என்ற செயல் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது. இச்செயல்பாடு மூலம் தற்போது வரை, ஒன்பது விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.
முன்னதாக, உக்ரைனின் ஒக்திர்கா நகரில் உள்ள ராணுவத் தளத்தில் ரஷ்ய மேற்கொண்ட பீரங்கி தாக்குதலில் 70 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஒக்திர்கா, கீவ் மற்றும் கார்கீவ் நகருக்கு இடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Exclusive: ரஷ்ய - உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழப்பு!