சென்னை:ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் மால்யத என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜன.4) நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் பேசிய இளையராஜா கூறியதாவது, “எனக்கு தமிழ் இலக்கிய அறிவோ, மொழி அறிவோ அவ்வளவு கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் முதல் முதலாக இசை அமைக்க சென்னை வருகிறேன். ஒரு படத்திற்கு இசை அமைக்கிறேன். அப்படத்தின் பின்னணி இசைக்காக என்னிடம் வருகிறது.
முதல் ரீலில் கதாநாயகியை அறிமுகப்படுத்துகிறார்கள். கதாநாயகி டூரிங் டாக்கீஸில் ஒரு படம் பார்க்கிறார். அதில் ஆண்டாளின் நடனம் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆண்டாளைப் பார்த்து மெய் மறந்து கதாநாயகி நிற்கிறாள். அந்த பாடலில் ஒரு இடத்தில் ஒலி இன்றி மௌனமாக இருக்கிறது. அதற்கு நான் இசை அமைக்க வேண்டிய சூழல். நான் ஏதோ ஒன்றை தேடிப்பிடித்து இசை அமைத்து விட்டேன். எனது முதல் படத்திலேயே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்து விட்டாள்.
நான் சிவ பக்தன். எனது உண்மை பெயர் ஞானதேசிகன். அது ராசைய்யா என்றாகி, பின்னாளில் இளையராஜா என்று மாறிவிட்டது. நான் 'இசைஞானி' என்ற பெயருக்கு தகுதி ஆனவனா என்றால், என்னைப் பொறுத்தவரை அது கேள்விக்குறிதான். மக்கள் 'இசைஞானி' என்று அழைக்கிறார்கள். ஓகே நமஸ்காரம்.
நான் என்னை அந்த மாதிரி நினைக்கவில்லை. அதில், எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. கர்வத்தை எல்லாம் சிறுவயதிலேயே தூக்கி எறிந்து விட்டேன். ரசிகர்கள் கைதட்ட கைதட்ட, எனக்கு கர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் எதற்காக கைதட்டுகிறார்கள் என்று தெரிந்த பின், என் தலையில் இருந்த பாரம் எல்லாம் இறங்கிவிட்டது. கர்வத்தில் இருந்து எப்போதோ விடுபட்டுவிட்டேன். எந்த புகழும், பாராட்டும் என்னை ஒட்டுவதில்லை. எனக்கு அந்த சிந்தனையே கிடையாது. நான் சிவ பக்தன்” என்று பேசியுள்ளார்.