சென்னையை அடுத்த திருவல்லிக்கேணி தேர் வீதியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தபின், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்:- '18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. முன்னுரிமை அடிப்படையிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் 14 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கு 90-க்கும் அதிகமான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
திருவல்லிக்கேணி தேர் வீதியில் இலவச தடுப்பூசி போடும் முகாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு சென்னை மாநகராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி இணையதளத்தில் நடமாடும் காய்கறி விற்பனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும். காய்கறிகள் தேவைப்படுவோர், அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் கரோனா கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஊரடங்கு முக்கியம், அதுமட்டுமின்றி வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்வது போன்ற பல்வேறு காரணங்களால் கரோனா குறைந்து வருகிறது. மாநகராட்சியில் 589 தனியார் மருத்துவமனைகள் இருக்கிறது. அந்த மருத்துவமனைகளில் காய்ச்சல் அல்லது கரோனா அறிகுறியுடன் யாரேனும் வந்தால், உடனடியாக மாநகராட்சிக்குத் தெரிவிக்கவேண்டும்.
தினமும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சென்னையில் கரோனா பரிசோதனைகள் குறைக்கப்படாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கிட்ஸ்களுக்கு கிரிக்கெட் கிட்': இது உதயநிதி உலா