புதுச்சேரி சமூக நலத்துறைச் சார்ந்த 36 மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்க கோரியும், துணைநிலை ஆளுநரை சந்தித்து விவாதிக்க நேரம் ஒதுக்க கோரியும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கடந்த 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவை வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இதுவரை துணைநிலை ஆளுநர் நேரம் ஒதுக்காததை கண்டித்து இன்று காலை தடையை மீறி ஆளுநர் மாளிகை அருகே சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே செல்ல முயன்ற முதலமைச்சர் நாராயணசாமியை துணை ராணுவத்தினர், காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதை கண்டித்து, முதலமைச்சர் நாராயணசாமி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட முதலமைச்சரிடம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோத்ரா, துணை மாவட்ட ஆட்சியர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர் கந்தசாமி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.