சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகக் குறைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று (மார்ச்.31) அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஏப்.01) அறிவித்துள்ளார். மேலும், 2020-2021 கடைசி காலாண்டில் ஏற்கெனவே இருந்த வட்டி விகிதமே மீண்டும் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், ”சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து, லாபம் ஈட்டுவதன் மூலம் நடுத்தர வர்க்கத்தின் மீது மற்றொரு தாக்குதலை நடத்த பாஜக அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் கையும் களவுமாக பிடிபடும்போது "இது கவனக் குறைவால் ஏற்பட்ட பிழை என நொண்டி சாக்கு சொல்லி நிதி அமைச்சர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்” என சாடியுள்ளார்.
முன்னதாக நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ”அடுத்த காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அறிவிப்பது ஒரு வழக்கமான பயிற்சி. மார்ச் 31 அன்று வெளியான அறிவிப்பு எப்படி கவனக்குறைவாக இருக்க முடியும்?” எனவும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.