புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை உள்ளோர் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்குகளை இன்று பதிவு செய்தனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள 720 இடங்களில் பிரெஞ்சுக்கு 81 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அவர்கள் வசிக்கும் நாட்டில் நேரில் வாக்களிக்கும் வாய்ப்பை பிரான்ஸ் வழங்குகிறது.
அதன்படி, இன்று கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4,546 பிரெஞ்சு குடிமக்கள் வாக்குப்பெட்டியில் வாக்களிக்க தகுதி உடையோர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இரண்டு, சென்னையில் ஒன்று மற்றும் காரைக்காலில் ஒன்று என நான்கு இடங்களில் நான்கு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 38 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்கின்றனர். பிரான்சின் கன்சுல் ஜெனரல் லிஸ் டால்போட் பாரே, புதுச்சேரியில் நடைபெறும் வாக்குப்பதிவை ஆய்வு செய்து, வாக்களிக்கும் செயல் முறையை மேற்பார்வையிட்டார்.