சுட்டெரிக்கும் வெயில்: தண்ணீர் தேடி படையெடுத்த காட்டு யானைகள்..வைரலாகும் வீடியோ! - Wild elephants in coimbatore
Published : Apr 26, 2024, 9:24 AM IST
கோயம்புத்தூர்: கோடை காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதியில் உள்ள செடி கொடிகள் காய்ந்து சருகாகி கடும் வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் நீர்நிலைகளைத்தேடி கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் நீர் வற்றி வருகிறது. இதனால், தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுகின்றன.
இதனைக்கருத்தில் கொண்டு வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க அடர்ந்த வனப்பகுதிகளில் தமிழக அரசு வனத்துறை சார்பில் தண்ணீர்த்தொட்டிகளை அமைத்துள்ளது. அந்த வகையில், தடாகம் வீரபாண்டி புதூர் அடுத்த மூலக்காடு மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள், ஊரின் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து தண்ணீர் நிரப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை அப்பகுதிக்கு குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வருகை புரிந்து அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்திவிட்டு சென்றுள்ளது. தற்போது, இது குறித்த விடீயோ வைரலாகி வருகிறது.