தஞ்சை மாதா கோட்டை ஜல்லிக்கட்டு; 600 காளைகள், 350 வீரர்களுடன் விறுவிறுப்பு! - லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை
Published : Feb 6, 2024, 1:36 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காளைகளும் அழைத்து வரப்பட்டுள்ளன.
இப்போட்டியில் 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் களம் கண்டு வருகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் காளையின் திமிலைப் பிடித்து அடக்கி வருகின்றனர். குறிப்பிட்ட எல்லை வரை காளையின் திமிலைப் பிடித்துச் செல்லும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, பரிசுகள் உடனுக்கு உடன் வழங்கப்படுகிறது. மேலும் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் செல்லும் காளையின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
களத்தில் 2 நிமிடங்கள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் பாத்திரம், ரொக்கப் பணம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பிற்காக, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.