ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது! - Srivilliputhur Andal Temple
Published : Jul 30, 2024, 3:17 PM IST
விருதுநகர்: 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். லட்சுமியின் அம்சம் என்று கூறப்படும் ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டியபின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் என்று ஆன்மீக ஐதீகம் உண்டு.
இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தை, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையான தேர்த்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று (ஜூலை 30) ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆடிப்பூர திருவிழா இன்று துவங்கி 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் 5ஆம் நாள் திருவிழாவான ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று கருட சேவையும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும். இத்திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தின்போது பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.