பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா: மல்லிகைப்பூ அலங்காரத்தில் மாதா தேர்பவனி! - Poondi Madha Basilica festival - POONDI MADHA BASILICA FESTIVAL
Published : May 15, 2024, 8:13 AM IST
தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் அமைந்துள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒருபகுதி இக்கோயிலில் பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த 6ஆம் தேதி அன்று துவங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடைபெற்றது. அதைப்போல், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
மல்லிகைப்பூ மற்றும் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட இந்த தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு புதுச்சேரி, கடலூர் உயர் மறை மாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் புனிதம் செய்து தேரினைத் தொடங்கிவைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் 'மரியே வாழ்க.. மரியே வாழ்க..' எனப் பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர்.
இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை மீண்டும் வந்தடைந்தது. இவ்விழாவில் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன், ஆலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ் உள்ளிட்ட தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.