சாலையில் உரசியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள்.. வீடியோ வெளியாகி பரபரப்பு! - students footboard in bus
Published : Jul 19, 2024, 3:11 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் வெலக்கல்நத்தம் மற்றும் பச்சூர் ஆகிய பகுதிகளிலிருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் குருகூர் வரை B7 என்ற அரசுப் பேருந்து சென்று வருகிறது.
இந்த அரசுப் பேருந்தில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், பருகூரிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பச்சூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தில், கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்து வந்தனர்.
மேலும், பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு கால்களை சாலையில் உரசிக்கொண்டும் வந்தனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அமைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்களை பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கண்டிக்க வேண்டும் எனவும், அவர்கள் கண்டிக்க தவறிய பட்சத்தில், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.