"ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக மாற்றம்" - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்! - adi dravidar school hostels
Published : Jul 2, 2024, 8:02 AM IST
திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை, மோரை ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்திருப்பதால் முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் பள்ளிகளில் ஆய்வு செய்து என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை கண்டறிந்து சரிசெய்து வருவதாகவும், பழுதடைந்துள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு மாணவர்கள் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அதேபோன்று ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பேருந்து சேவை இருப்பதால், ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில் மாணவர்கள் தங்காமல் வீட்டிற்கு செல்வதால் விடுதியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அத்தகைய தங்கும் விடுதிகளை கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிட மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து வருவதாக புகார் வந்திருப்பதாகவும், அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிவில் ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.