Published : Jun 3, 2024, 2:32 PM IST
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு! - Edappadi Palaniswami
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் பகுதியின் புத்திரகவுண்டன்பாளையம் புறநகர் பகுதியில், உலகிலேயே மிக உயரமான 146 அடி கொண்ட முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முத்துமலை முருகன் கோயிலுக்கு வந்தார். அங்கு, முருகன் சிலையின் திருவடியில் மலர் தூவி வணங்கி, முருகன் வேலை தாங்கி மூலவரைச் சுற்றி வந்து சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், முருகன் சிலையின் உச்சிக்குச் சென்று சங்கல்ப பூஜை செய்தும், பன்னீர் கலசத்தைக் கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்தும், மலர் தூவியும் வழிபட்டார்.
இதனையடுத்து, சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்சங்கரன், நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.