பொதுமக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்..! என்ன காரணம்? - Central Govt Fund Allocation
Published : Feb 8, 2024, 10:41 PM IST
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு திமுகவினர் அல்வா கொடுத்தனர். இதுகுறித்து கேட்ட போது, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்கும் நிதிப்பகிர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில் அல்வா கொடுக்கப்பட்டதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் ஏராளமான திமுகவினர் பேருந்து ஏற வந்த பயணிகளுக்கு அல்வா கொடுத்து மத்திய அரசு தமிழகத்திற்குக் கொடுத்த நிதி பங்கீடு இதுதான் எனவும், மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி தமிழகத்திற்குக் குறைவான நிதி அளித்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் முறையான அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்தில் இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர். இதனால் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பேருந்து பயணிகளிடம் அல்வா கொடுக்கும் போது, மத்திய அரசுக்கு எதிராக வார்த்தைகளைக் கூறி கொடுத்த அல்வாவை "எனக்கு வேண்டாம் நீங்களே எடுத்துக்கோங்க" என பயணி ஒருவர், அல்வாவை வாங்க மறுத்த சம்பவமும் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.