நான் செத்து பொழச்சவன்டா.. எமன பார்த்து சிரிச்சவன்டா.. இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி உயிர்பிழைத்த அதிசயம்!
Published : 7 hours ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரங்கோட்டை தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியாயி. 105 வயதான இந்த மூதாட்டிக்கு 70 வயதில் செல்லம்மாள், சுப்பம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
மாரியாயியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மூத்த மகள் சுப்பம்மாள் வீட்டில் மாரியாயி வசித்து வருகிறார். மூதாட்டி மாரியாயிக்கு 14 கொள்ளுப் பேரன் பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியாயிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகையச் சூழ்நிலையில், இனி மாரியாயி உயிர் பிழைக்க மாட்டார் என்று நினைத்து உறவினர்கள் அனைவரும் அவருக்கு பால் ஊற்றி இறந்து விட்டதாக நினைத்து இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், திடீரென உடல் நலம் குணமாகி எழுந்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது மாரியாயி வெற்றிலை, பாக்கு இடித்து சாப்பிட்டுக் கொண்டும், தன் வேலைகளை தானே செய்து கொண்டும் நடமாடி வருகிறார். இந்தச் சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.