தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / state

"போன்சாய் செடி போன்ற முதல்வர்" - விடுதலையான உடன் சவுக்கு சங்கர் விமர்சனம்.. கள்ளக்குறிச்சி ஆதாரம் இருப்பதாக அதிரடி பேட்டி! - COURT RELEASE SAVUKKU SHANKAR

திமுக அரசுக்கு ஆதரவாக பேசினால் உடனடியாக விடுதலை செய்கிறோம் இல்லையென்றால் 1 வருடம் சிறையில் இருக்கும்படி செய்துவிடுவோம் என காவல்துறையினர் நிபந்தனை விதித்தனர் என மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர் பரபரப்பாக பேசியுள்ளார்.

மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கரை வரவேற்கும் ஆதரவாளர்கள்
மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கரை வரவேற்கும் ஆதரவாளர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரை:யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கஞ்சா வைத்து இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேனி போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை முடித்து வைத்தனர்.

சவுக்கு சங்கர் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலையான சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என் மீது பொய்யாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் போலீசாரால் அலைக்கழிக்கப்பட்டேன். கோவை சிறையில் எனது வலது கை மூன்று இடங்களில் எலும்புகள் உடைத்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் என்னை கஸ்டடியில் எடுக்கும் போது திமுக அரசிற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது, திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் என நிபந்தனையாக கூறினார்கள்.

மேலும், இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக உங்களை விடுவிப்போம் அதை மீறினால் நாங்கள் ஒரு வருடத்திற்கு உங்களை சிறையிலிருந்து விடமாட்டோம் என கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள். நான் உண்மைகளை பேசுவதற்கு என்றும் அஞ்ச மாட்டேன் என பதில் அளித்ததன் காரணமாக சென்னை புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறையில் இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் என்னை கைது செய்தார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல.‌ தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி. பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறந்தால் கருணையின் அடிப்படையில் பதவி வழங்குவார்கள். அது போலத்தான் தற்போது முதல்வராக மு.க ஸ்டாலின் வந்திருக்கிறார். நாட்டில் நடக்கும் எந்தவித உண்மையும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக முதல்வரும், உதயநிதி ஸ்டாலினும் மிக கவனமாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த 2023 டிசம்பரில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கிடைக்கும் நிலை எனவும் அதை தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதை போன்று மீண்டும் நடைபெறும் எனவும் தமிழக உள்துறை அமைச்சருக்கு சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு டிசம்பரில் கடிதம் எழுதி இருக்கிறார்.

ஆனால் அந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது 66 உயிர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சவுக்கு மீடியா முடக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பாஸ்போர்ட் வழக்கு குறித்து பேசியதற்காக பத்திரிகையாளர் வராகி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்த குண்டாஸ்: 'அந்த விவரங்களையெல்லாம் தாங்க'; தமிழ்நாடு போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இது போன்ற கைதுகளை தனி நபருக்கு நடக்கும் கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். ஐந்து மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதை நம்பி இருந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே இருந்த வீரியத்தை போன்று மீண்டும் செயல்படுவேன் மக்களுக்கு எடுத்துரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சவுக்கு மீடியா தயங்காது. எனது கையை கோவை சிறையில் வைத்து உடைத்தார்கள் தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது துளியும் இல்லை. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தன்னை பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர்.

ஆனால் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும், குரல் வளையையும் நெருக்குவதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாத ஒரு அவல நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாபக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details