நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கொலக் கொம்பை செங்குட்டுவராயன் மலைக்கு, நேற்று மாலை 10 இளைஞர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மலை ஏற்றத்திற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அனைவரும் மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது, மலையில் இருந்து தேனீக்கள் கூடு கலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மலையேற்றத்தில் இருந்த இளைஞர்கள் தேனீக்களைக் கண்டு நாலாபுறமும் ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு, மலையில் இருந்து இறங்கும் போது அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இதில், திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள கோபால்பட்டியைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் திடீரென மாயமாகி உள்ளார். உடனே, உடன் சென்ற நண்பர்கள் பிரவீனை கூச்சலிட்டும், தவறுதலாக எங்கேனும் விழுந்து உள்ளாரா என தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் நீண்ட நேரமாக கிடைக்காத நிலையில், உடனே கொலக் கொம்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.