சென்னை: சென்னையில் மாராத்தான் ஓட்டம் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 700க்கும் அதிகமான பெண்கள் முதல்முறையாக புடவை அணிந்து மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடினர். இந்நிகழ்ச்சியை தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் குறித்தும், மாதவிடாய் நேரங்களில் அவர்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. குறிப்பாக பழங்குடியின பெண்களுக்கு மாதவிடாய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது.
மேலும் இந்த மாரத்தான் டிக்கெட் மூலம் கிடைத்த நிதியின் மூலமாக பழங்குடியின பெண்களுக்கு நாப்கின் உள்ளாடைகள் போன்ற பொருட்களை வாங்கி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதில், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து வந்த பல பெண்கள் புடவை அணிந்து இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர்.