மாவீரன் பட பாணியில் சேதமான புது அரசு குடியிருப்பு.. நூழிலையில் உயிர்தப்பிய தந்தை - மகன்! - sri lankan tamils Residence Damage - SRI LANKAN TAMILS RESIDENCE DAMAGE
🎬 Watch Now: Feature Video


Published : Sep 17, 2024, 2:14 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் சின்னபள்ளி குப்பம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, மின்னூர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில், சுமார் 12.42 கோடி ரூபாய் மதிப்பில் 236 புதிய குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்து, பயனாளர்களுக்கு குடியிருப்பின் சாவிகளை வழங்கினர்.
இந்த நிலையில், பயனாளர்களில் ஒருவரான மையூரன் - விஜி தம்பதி, அவர்களது குழந்தையுடன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட குடியிருப்பில் குடியேற செல்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும்போது, குடியிருப்பு கட்டட மேற்தள பூச்சுகள் இடிந்து விழுந்ததாகவும், இதில் மையூரன் தனது குழந்தைகளுடன் எந்தவித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக குடியிருப்பில் இருந்து வெளியேறி தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விஜி கூறுகையில், "இலங்கை தமிழர் குடியிருப்பில் கட்டப்பட்ட பெரும்பாலான குடியிருப்புகள் விரிசலடைந்து, மிகுந்த சேதமடைந்துள்ளது. கட்டி முடிக்கப்பட்டு எங்களுக்கு வழங்கிய 3 வாரங்களுக்கு உள்ளாகவே மேற்தள பூச்சுகள் இடிந்து விழுகிறது. இப்படி தரமற்ற கட்டடத்தில் எப்படி குழந்தைகளை வைத்துக் கொண்டு நாங்கள் குடியிருக்க முடியும்?" என்று குற்றம்சாட்டினார்.