விருதுநகர்:தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் பகுதியில் இன்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, பக்ரீத் பண்டிகையான இன்று விருதுநகர் பெரிய பள்ளிவாசல் பகுதியில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு அங்கிருந்த இஸ்லாமிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் தொகுதியில் 1000 இடங்களில், மூன்று மாதங்களில் நன்றி தெரிவிக்க இருக்கிறேன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு முதலாளிகள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். முதலாளிகள் அளித்த கட்டளையை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் உங்களது முதல் குரல் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை மீட்டெடுக்க முயற்சிப்பேன். ஜிஎஸ்டி ஆல் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளின் குரலாகவும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை சாதிய தலைவராக மாற்றி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, சாதி மற்றும் மத அரசியலை செய்வது ஆர்எஸ்எஸ் டிஎன்ஏ-வில் உள்ளது. ஆர்எஸ்எஸ் வழியில் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி எங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது. சாதி மற்றும் மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை. சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள்.