தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைதியாக நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணும் மையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு! - Vikravandi by election polling

Vikravandi By Election: அமைதியாக நடைபெற்ற முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 8:12 PM IST

Voters
வாக்காளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி துவங்கியது.

24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்த நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பிரச்சாரம் நாடைபெற்ற நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தனது சொந்த ஊரான அன்னியூர் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதேபோல், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வாக்களித்தார்.

இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, கானை உள்ளிட்ட மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. சிறிது நேர தாமதத்துக்குப் பின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மாம்பழப்பட்டு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டி.கொசப்பாளையம் கிராம வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணை கத்தியால் குத்திய விவகாரத்தில் அவரது முன்னாள் கணவர் ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குளவிக்கூட்டால் வாக்குப்பதிவின் போது இடையூறு ஏற்பட்டது. எனினும், பல இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வந்தது.

வயது முதிர்ந்தோர் சக்கர நாற்காலிகளில் வந்து தங்கள் வாக்கினை ஆர்வமுடன் செலுத்தினர். காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு, வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில், அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இடைத்தேர்தலுக்காக 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட பிறகு, அப்பகுதியில் நுழைய யாருக்கும் அனுமதியில்லை. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 5 அடுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் 276 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. காலை 9 மணி வரை 12 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பின்னர் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் பிற்பகல் 3 மணி வரை 64.44 சதவீத வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு 77.3 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில், 1.84 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பல்வேறு இடங்களில் குளறுபடி.. பாமகவினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details