தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தான முறையில் அரசுப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து மாணவர்கள் அட்டகாசம்! - College students on bus roof - COLLEGE STUDENTS ON BUS ROOF

College students sitting on bus roof top: சென்னையில் மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணித்த கல்லூரி மாணவர்கள் பாதியிலேயே பேருந்தை நிறுத்த செய்து இறங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் புகைப்படம்
கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 4:49 PM IST

Updated : May 8, 2024, 5:38 PM IST

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் வீடியோ (Credits to ETV Bharat Tamil Nadu)

சென்னை:ஆபத்தான முறையில் நேற்று (மே 7) அரசுப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கூச்சலிட்டபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் சிலர், காவலர்களிடம் சிக்காமல் இருக்க, பேருந்து சென்ட்ரலை நெருங்கியவுடன் மேம்பாலம் மீது பேருந்தை பாதியிலேயே நிறுத்தச் செய்து, கீழே குதித்து நடந்து சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேருந்தின் படிகளில் தொங்குவது, சாலையில் கால்களை உராய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்குவது, மேற்கூரையில் அமர்வது என சென்னை மாநகரில் அபாயகரமான செயல்களில் அவ்வப்போது ஈடுபடும் கல்லூரி மாணவர்களின் செயல் கேள்வி எழுப்பும் வகையில் இருந்து வருகிறது.

இது குறித்து காவல்துறையினர், போக்குவரத்துக் கழகத்தினர், கல்லூரி நிர்வாகத்தினர் என யார் அறிவுறுத்தியும் மாணவர்களின் இந்த செயல் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை விவேகானந்தர் இல்லத்திலிருந்து, 38C வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரையில், ஆபத்தான முறையில் அமர்ந்தபடி, கல்லூரி மாணவர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டு பயணம் செய்தனர்.

இதையடுத்து, பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை நெருங்கிய போது, அங்குள்ள காவலர்களுக்கு பயந்து, அவர்கள் தங்களை பிடித்துவிடக் கூடாது என நினைத்து, மாணவர்கள் மேற்கூரையில் அமர்ந்தபடியே பேருந்தை தட்டி நிறுத்த வைத்தனர். இதையடுத்து பேருந்து நின்றவுடன், மேற்கூரையில் இருந்து முன்பக்க கண்ணாடிக்கு முன்பாக தடதடவென கீழே குதித்த மாணவர்கள், தங்கள் கல்லூரி பெயரைக் கூறி ஜே..ஜே.. என முழக்கமிட்டபடி மேம்பாலத்தில் நடந்து சென்றனர்.

இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து வீடியோ எடுத்துள்ளனர். மாணவர்கள் ஆபத்தான முறையில் மேற்கூரையில் அமர்ந்து கூச்சலிட்டபடி வந்ததுடன், நடுவழியில் பேருந்தை நிறுத்த வைத்து கீழே குதித்து சென்றதை, அவ்வழியே சென்றவர்கள் வேதனையுடன் பார்த்துச் சென்றனர்.

இதையும் படிங்க:"சிஎஸ்கே-க்கு வீசில் போடு" பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடத்துநர்களுக்கு உலோக விசில்! - Csk Whistles Gift For Bus Conductor

Last Updated : May 8, 2024, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details