தமிழ்நாடு

tamil nadu

'15 நாட்கள் நிர்வாகத்தை துரைமுருகன் கவனிப்பாரா?'..திமுகவை சீண்டும் கேள்விக்கு திருமா பதிலடி! - VCK Thirumavalavan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 8:47 PM IST

VCK Thirumavalavan: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ள நிலையில் 15 நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவு தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ளது. எனவே, திமுகவை சீண்டிப்பார்க்க இப்படி விமர்சிக்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி:அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். அவருடைய பயணத்தின் நோக்கம் தொழில் முதலீட்டு நிறுவனங்களை சந்தித்து வருகிற அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, "மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம். இந்தியா முழுவதும் மதுவிலக்கை ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். போதைப் பொருள்கள் வெகுவாக புழக்கத்தில் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இதனை தேசிய பிரச்னையாக கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிற மாநாடாக இந்த மாநாடு அமையும்.

முதலமைச்சர் அமெரிக்க பயணம்: அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். அவருடைய பயணத்தின் நோக்கம் தொழில் முதலீட்டு நிறுவனங்களை சந்தித்து வருவது. அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும். வெளிநாடு செல்லும் முதலமைச்சர் நிர்வாகத்தை கவனிப்பதற்காக துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

முதலமைச்சர் 15 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த 15 நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ள காலம் இது. எனவே, இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது. திமுகவை சீண்டிப்பார்க்க இப்படி விமர்சிக்கிறார்கள்.

விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற ஒரு எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். எம்ஜிஆர் சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால், அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்ட போது, நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள். அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம்.

வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது திமுகவிலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால் வெற்றி பெற முடிந்தது. அதன் பின்னர் சினிமா மூலம் வந்த தலைவர்கள் அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம்.

தற்போது மக்களிடையே பிரபலமாக உள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம். விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். அவற்றை தாக்குப் பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இது குறித்து நாம் ஒரு கருத்தை சொல்ல முடியும். முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களை இடிக்கும் அரசின் நடவடிக்கை; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details