கோயம்புத்தூர்: கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் கோவை வருகை மக்கள் மற்றும் பாஜகவினரால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை (மார்ச் 18) மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் துவங்கி, 3 கி.மீ. கடந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேரணி நிறைவடையும். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும், பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு தர இருக்கின்றனர்.
கோவை மட்டுமின்றி, அருகில் உள்ள சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், மோடியின் வருகையின் போது பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி அமைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது, சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று கொள்ளலாம். இதில் பொது மக்கள் பங்கேற்க எந்த கட்டுப்பாடும் கிடையாது. குறிப்பாக இதற்கென தனியாக பாஸ் கிடையாது. இருப்பினும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்கள் 2 மணிக்கு முன்பு அந்தந்த பகுதிகளுக்கு வந்து சேர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமருக்கு தேர்தல் தேதி தெரிந்ததால் தான், தமிழகத்திற்கு வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் பழி போடுவது தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொள்வதாக நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் மோடியை 28 பைசா என அழைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்.