தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி அருகே பிரபல ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீசார்.. நடந்தது என்ன? - trichy murder case

trichy murder case: திருச்சியில் முன்விரோதம் காரணமாக நண்பரைக் கொன்று விட்டு காட்டுக்குள் பதுங்கியிருந்த பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 3:55 PM IST

ரவுடி கலைப்புலி ராஜா புகைப்படம்
ரவுடி கலைப்புலி ராஜா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்ற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு (03.07.2024) நவீன், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லால்குடி மதுபான கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நவீனுக்கும் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இதில், படுகாயம் அடைந்த நவீன்குமார் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அப்பகுதியில் இருந்தவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று காலை ஆங்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத், பாலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ராஜா திருச்சி அடுத்த சிறுகனூர் காப்புக் காட்டில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று ராஜாவை கைது செய்ய முயன்றனர். அப்போது ராஜா போலீசாரை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் தற்காப்புக்காக அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயமடைந்த ராஜாவை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கலைப்புலி ராஜா மீது பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தாம்பரத்தை உலுக்கிய இரட்டைக் கொலை; பீர்க்கன்காரணை இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம்..!

ABOUT THE AUTHOR

...view details