தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணிகள் கவனத்திற்கு.. "ஒரு வாரம் முன்பே மருத்துவமனையில் சேருங்கள்" - பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்ப்பிணிகள் பிரசவ காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

பத்திரிகை செய்தி மற்றும் கர்ப்பிணி(கோப்புப்படம்)
பத்திரிகை செய்தி மற்றும் கர்ப்பிணி(கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள் குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் மழையினால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள பகுதிகளில் உள்ளவர்கள், தாங்கள் திட்டமிட்டுள்ள மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பருவகால மழை மற்றும் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிரசவத் தேதி நெருங்கிய கர்ப்பிணித் தாய்மார்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிரசவம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வானிலை ஆய்வு மையத்தால் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், பிரசவத் தேதி நெருங்கிய 2,388 கர்ப்பிணித் தாய்மார்கள் 15.10.2024 தேதியிலும், 3,314 கர்ப்பிணித் தாய்மார்கள் 16.10.2024 அன்றும், முன்கூட்டியே பாதுகாப்பு கருதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பிரசவத் தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள் குறிப்பாக மழைநீர் தேங்கும் பகுதிகள் மற்றும் மழையினால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள பகுதிகளில் உள்ளவர்களும், தாங்கள் திட்டமிட்டுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும், கடைசி நேர காலத்தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாட்டினை உடனடியாக மேற்கொள்ள இதன் மூலம் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் வேண்டி கொள்ளப்படுகிறது." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details